LATEST NEWS
நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! உடல்நலக் குறைவால் மாற்றுப் பணிக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… முன்னறிவிப்பின்றி நகர்த்தப்பட்ட பேருந்து… சக்கரத்தின் கீழ் நசுங்கி ஊழியர் பரிதாப பலி..!!
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்து கழக பணிமனையில் சனிக்கிழமை காலை கொடூர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அதில் MSRTC நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் பேருந்தின் சக்கரத்தின் கீழ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் பாண்டுரங் அண்ணப்பா சவான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். MSRTC ஓட்டுநரான இவர், உடல்நலக் குறைவு காரணமாகப் பணிமனை சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
சாஹுபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சவான் சாய்வுதளத்தில் தனது பணியை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சிக்கந்தர் மானேர் என்ற மற்றொரு ஓட்டுநர் பழுதுபார்ப்பதற்காகப் பேருந்தை முன்னோக்கி நகர்த்தியுள்ளார். பேருந்து சாய்வுதளத்தின் மேல் ஏறியபோது, எதிர்பாராதவிதமாகச் சவான் அதன் முன் சக்கரத்தின் கீழ் சிக்கிக்கொண்டார். சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்டு பணிமனையில் இருந்த பிற ஊழியர்கள் சத்தமிடவே, ஓட்டுநர் மானேர் பேருந்தை நிறுத்தினார். ஆனால் அதற்குள்ளாகவே சவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாஹுபுரி காவல் துறையினர், விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து பஞ்சநாமா நடத்தி, பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்தத் துயரச் சம்பவம் பணிமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வித முன் அறிவிப்போ அல்லது எச்சரிக்கையோ இன்றிப் பேருந்தை நகர்த்தியதே விபத்துக்குக் காரணம் என்றும், இதனால் சவானின் குடும்பத்திற்கு உரிய நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அவரது சக ஊழியர்களும் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
