LATEST NEWS
“நள்ளிரவில் சலங்கை சத்தம் கேட்குது…” பள்ளிக்கூடத்துல பேய் இருக்கு… பயத்தில் அலறி ஓடிய 300 மாணவர்கள்… ஆசிரமப் பள்ளியில் நடுங்க வைக்கும் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம், மேல்காட் பகுதியில் உள்ள தரணி தாலுகாவிற்குட்பட்ட டோமா பழங்குடியின ஆசிரமப் பள்ளியின் விடுதியில் ‘பேய் பிடித்துள்ளதாக’ பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த 15 முதல் 16 மாணவிகள் திடீரென உரக்கச் சிரிப்பதும் அழுவதுமாக வழக்கத்திற்கு மாறாக நடந்துகொண்டனர். மேலும், இரவில் சலங்கை ஒலிப்பது போன்ற மர்மச் சத்தங்கள் கேட்பதாகச் சில மாணவிகள் கூறியதால் விடுதியில் கடும் பயமும் பீதியும் நிலவியது. விடுதி காப்பாளர் உஜ்வலா இங்லே இதுகுறித்து உடனடியாகப் பள்ளி முதல்வருக்குத் தகவல் தெரிவித்தார்.
இந்தச் செய்தி பள்ளி வளாகத்தைத் தாண்டி சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பரவியதால், மாணவிகளுக்கு பேய் பிடித்துள்ளதாக வதந்தி வேகமாகப் பரவியது. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு வந்து தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பயத்தின் காரணமாக 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறித் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இவ்வாறு விடுதியை விட்டுச் சென்ற மாணவிகளில் பெரும்பான்மையானவர்கள் ‘ஏக்தாய்’ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
தகவலறிந்த சுகாதாரத் துறையின் மருத்துவக் குழு உடனடியாக ஆசிரமப் பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குப் பின் பேய் பிடித்துள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை மருத்துவர்கள் முற்றிலுமாக மறுத்தனர். இது பேய் அல்லது ஆவி தொடர்பான விஷயம் அல்ல என்றும், ஒரே இடத்தில் ஒன்றாகத் தங்கியிருக்கும் சிறுமிகளிடையே மன அழுத்தம் மற்றும் பயத்தினால் ஏற்படும் ‘மாஸ் ஹிஸ்டீரியா’ எனப்படும் மனநலம் சார்ந்த நிலை என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தற்போது சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் ‘மூடநம்பிக்கை ஒழிப்புச் சங்கம்’ ஆகியவை இணைந்து மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் அளித்து வருகின்றன. வதந்திகளை நம்பாமல் மாணவிகளை மீண்டும் பள்ளிக்கும் விடுதிக்கும் அனுப்புமாறு பள்ளி நிர்வாகம் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
