LATEST NEWS
ராஜஸ்தானில் நடுங்கவைத்த கொடூரம்..! பள்ளி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து தரைமட்டம்… 120 அரசு பள்ளி குழந்தைகள் மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சிப் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் டூங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள தோவடா பிளாக்கிற்கு உட்பட்ட சத்து தேவகி கிராம பஞ்சாயத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீரென ஒரு வகுப்பறையின் கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தின் போது பள்ளியில் சுமார் 120 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் இருந்தனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தின் சரியான முன்எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு காரணமாக எவருக்கும் எந்தவிதக் காயமும் ஏற்படாமல் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
சம்பவத்தன்று காலை வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதைக் கேட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் உடனடியாக வகுப்பறைகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். வெளியே வந்து பார்த்தபோது, பூட்டப்பட்டிருந்த பழைய ஆபத்தான அறைகளில் ஒன்றின் கூரை முழுமையாக இடிந்து விழுந்திருந்தது தெரியவந்தது.
பள்ளியிலுள்ள 10 அறைகளில் 2 அறைகள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால், கல்வித் துறை மூலம் அவை ‘பாதுகாப்பற்றவை’ என அறிவிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக பூட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்த அறைகளில் மாணவர்களை அமர வைக்காமல் இருந்ததே 120 குழந்தைகளின் உயிர் தப்பக் காரணமாக அமைந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கல்வித் துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, எஞ்சியுள்ள பழுதடைந்த அறைகளை முழுமையாகச் சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
