LATEST NEWS
“ரூ.50 கோடியை தூக்கி வீணாக்கிட்டாங்க..!” திமுகவை நேருக்கு நேர் எதிர்த்த தவெக எம்.எல்.ஏ கருப்பையா.. பேரவையில் வெடித்த ஜல்லிக்கட்டு சர்ச்சை..!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையைத் திறப்பதற்குப் பதிலாகப் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டதை விமர்சித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ கருப்பையா பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 10 ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கும் சூழலில், அதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கித் திறந்திருந்தால் இளைஞர்களுக்கும் சமுதாயத்திற்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வாழ்வாதாரம் உயர்ந்திருக்கும் என்றும், அதை விடுத்துப் பயன்பாடற்ற உள்கட்டமைப்புகளுக்கு இவ்வளவு தொகையை வீணடித்திருக்கத் தேவையில்லை என்றும் அவர் அவையில் வாதிட்டார். இளைஞர்களின் எதிர்காலச் சீரழிவைத் தடுக்கும் நோக்கில் வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளித்து அவர் பேசிய இந்த உரை, அவையில் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
எம்.எல்.ஏ கருப்பையாவின் இந்த மாற்றுப் பொருளாதாரக் கருத்தை, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான ஒன்றாகச் சித்தரித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் தொன்மையான பண்பாடு மற்றும் வீரத்தின் அடையாளம் என்றும், அதைப் பெருமைப்படுத்தவே புதிய மைதானம் கட்டப்பட்டது என்றும் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உடனடியாகப் பதிலடி கொடுத்தார். இருப்பினும், ஊருக்கு வெளியே கட்டப்பட்ட இந்த மைதானத்தால் மக்களுக்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை எனத் தவெக அமைச்சர் நிர்மல் குமார் அவையில் குறுக்கிட்டு நியாயப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை முன்வைத்து, தவெக அரசு தமிழர்களின் பண்பாட்டை அவமதிப்பதாகக் கூறி திமுகவின் ஐடி விங் மற்றும் பிற அரசியல் இயக்கங்கள் சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்களை எழுப்பி வருகின்றன.
