LATEST NEWS
“நரியின் போலி கருத்துக்கணிப்பு” பிரதமர் வேட்பாளர் சர்ச்சை குறித்து எக்ஸ் தளத்தில் குட்டிக்கதை பகிர்ந்த காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்..!!
சமீபத்தில் தேசிய அளவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து வெளியானக் கருத்துக்கணிப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் தளத்தில் “நரியின் போலி கருத்துக்கணிப்பு” என்ற பெயரில் ஒரு குட்டிக்கதையைப் பகிர்ந்துள்ளார். இந்தியா டுடே – சி வோட்டர்ஸ் நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ பொதுக் கருத்துக்கணிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தவெக அமைச்சர்கள் சிலர் விஜய்யை 2029-ன் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத் தொடங்கியதற்கு மறைமுகப் பதிலடி கொடுக்கும் வகையில் இக்கதை பகிரப்பட்டுள்ளது.
அவர் பகிர்ந்துள்ள குட்டிக்கதையில், “ஒரு காட்டில் சிங்கமும் யானையும் நெருங்கிய நண்பர்களாக இருந்து காட்டின் முக்கிய முடிவுகளை எடுத்து வந்தன. அவற்றின் நட்பைப் பார்த்துப் பொறாமைப்பட்ட ஒரு நரி, காட்டில் சில விலங்குகளிடம் மட்டும் ரகசியமாகக் கேள்வி கேட்டுவிட்டு ஒரு ‘போலி கருத்துக்கணிப்பை’ வெளியிட்டது. அதில், காட்டின் அடுத்த அரசனாக யானைதான் வர வேண்டும் என 80% விலங்குகள் விரும்புவதாக நரி அறிவித்தது. இதைத் தொடர்ந்து சிங்கம் தன் நண்பனான யானையைச் சந்தேகிக்கத் தொடங்கியது; இதன் மூலம் சிங்கத்தையும் யானையையும் பிரிக்க நரி சூழ்ச்சி செய்தது” என்று மாணிக்கம் தாகூர் விவரித்துள்ளார்.
இந்தக் கதையின் வாயிலாக, “ஒவ்வொரு எண்ணும் உண்மையைக் கூறாது, ஒவ்வொரு சர்வேயும் மக்களின் உண்மையான குரல் அல்ல” என்று மாணிக்கம் தாகூர் எச்சரித்துள்ளார். சில நேரங்களில் மக்களின் குரல் எனக் காட்டப்படும் எண்கள், உண்மையானக் கூட்டணிகளுக்குள் பிரிவினையை உண்டாக்குவதற்காக சில சக்திகளால் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போலி சர்வேகளின் மிகப்பெரிய வெற்றியே, அதன் எண்களை மக்கள் நம்புவது அல்ல, மாறாக அதை நம்பி தங்களின் நெருங்கிய நண்பர்களையே (கூட்டணிக் கட்சிகளை) சந்தேகிக்கத் தொடங்குவதுதான் என்றும் அவர் தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
