LATEST NEWS
“அந்த வீடியோவில் தப்பி ஓடுவது எங்க குழுவினர் தான்” அதில் 49 தமிழர்கள் சீன எல்லைக்குள் சிக்கிட்டாங்க.. ஆனா எந்த தகவலும் இல்ல.. சென்னை டிராவல்ஸ் உரிமையாளர் உருக்கம்.!!
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் ஆன்மிகச் சுற்றுலா நிறுவனம் மூலமாகத் தமிழகத்தைச் சேர்ந்த 49 பேர் நேபாளம் வழியாகக் கைலாஷ் யாத்திரைக்குச் சென்றுள்ளனர். 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அவர்கள் சென்னை திரும்ப வேண்டிய நிலையில், நேபாள – சீன எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த காட்டாற்று வெள்ளத்தில் அங்கிருந்த குடியேற்ற அலுவலகக் கட்டிடமே அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் யாத்திரைக்குச் சென்றவர்களின் நிலை என்ன என்பது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலா நிறுவன உரிமையாளர் மறவேள், குடியேற்ற மையத்தின் சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் தங்களது குழுவினர் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். வெள்ளம் வந்தபோது அங்கிருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மலை மேல் ஓடியதாகவும், ஒரு சிலர் சீனப் பகுதிக்குள் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பகுதி முழுவதும் சுமார் 6 அடி உயரத்திற்குச் சேற்றால் மூடப்பட்டுக் கிடப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
தங்களது சுற்றுலா நிறுவனத்தைச் சேர்ந்த 3 குழுக்களும் இந்த வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ளதாகக் கூறியுள்ள அவர், இது தொடர்பாக நேபாள அரசிடமிருந்து மட்டுமே தகவல்கள் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தப்பி ஓடிய தங்களது குழுவினர் சீனப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் சூழலில், சீன அரசிடமிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதனால் அவர்களைத் தொடர்புகொள்வதில் சிக்கல் நீடிப்பதாகவும் அவர் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார்.
