CRIME
“அப்பா ஒரு பெரிய குழி தோண்டுறாரும்மா..!” தாய்க்கு வந்த கடைசி போன் கால்..! சந்தேகத்தால் 19 வயது மகளைக் கொன்று 3 அடி ஆழத்தில் புதைத்த தந்தை..! அமிர்தசரஸில் அரங்கேறிய கொடூரக் கொலை..!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள மத்தேவால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தந்தையே தனது 19 வயது மகளைக் கொலை செய்து, வீட்டின் பின்புறம் 3 அடி ஆழப் பள்ளத்தில் புதைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த பெண் 19 வயதான நவநீத் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக தாய் சரப்ஜித் கவுர் ஆகஸ்ட் 25 அன்று வீட்டை விட்டு வெளியேறி தாய் வீட்டிற்குச் சென்றுவிட்ட நிலையில், ஆகஸ்ட் 31 அன்று நவநீத் தனது தாயைத் தொடர்பு கொண்டு, “அப்பா வீட்டின் வெளியே ஒரு பெரிய குழி தோண்டுகிறார்” என்று பதற்றத்துடன் கூறியுள்ளார். அதற்குப் பிறகு மகளின் போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால், சந்தேகம் அடைந்த தாய் வந்து கேட்டபோது, மகளை 6 மாதங்களுக்கு வெளியே அனுப்பிவிட்டதாகக் தந்தை கூறியுள்ளார்.
தந்தையின் பதிலில் சந்தேகமடைந்த தாய் சரப்ஜித் கவுர், புதன்கிழமை அன்று தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகள் கூறிய இடத்தில் புதிதாக மண் தோண்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து மத்தேவால் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் சந்தேகத்திற்குரிய இடத்தை தோண்டிப் பார்த்தபோது, சுமார் 3 அடி ஆழத்தில் நவநீத் கவுரின் அழுகிய நிலையில் இருந்த உடலைக் கைப்பற்றினர். மகளின் சடலத்தைக் கண்டு தாய் மயக்கமடைந்தார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மூத்த மகள் எட்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து சென்றதால் ஆத்திரத்தில் இருந்த தந்தை, இளைய மகள் நவநீத் கவுர் மீதும் காதல் விவகாரம் தொடர்பாகச் சந்தேகம் கொண்டு வந்துள்ளார். இந்த சந்தேகத்தின் காரணமாகவே அவர் தனது சொந்த மகளையே கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் தலைமறைவாக உள்ள தந்தையின் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடி வருகிறது.
