LATEST NEWS
என் அப்பாவும் மிசாவில் பாதிக்கப்பட்டவர் தான்… அதிமுக-திமுக ரெண்டு பேரும் யார் தெரியுமா..? வன்னி அரசு பரபரப்பு பேட்டி..!!
திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இல்லாத இந்தியாவையும், சனாதனம் ஒழிந்த சமத்துவ இந்தியாவையும் உருவாக்குவதே தங்களின் முதன்மை இலக்கு என்றார். அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கொள்கைகளை ஆயுதமாகக் கொண்டு, தமிழகத்தில் பாஜக காலூன்றுவதைத் தடுப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விவகாரங்களை வைத்து மதம் மற்றும் சாதி ரீதியாக பதற்றத்தை உருவாக்க முயற்சிகள் நடந்தாலும், விசிக இருக்கும் வரை அது சாத்தியமாகாது என உறுதியளித்தார். மேலும், கொள்கை ரீதியாக ஒத்துப்போகும் இடதுசாரி கட்சிகள் எதிர்காலத்தில் தங்களது அணியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவுடனான கூட்டணி பயணத்தில் பல வலிகளையும் அவமானங்களையும் பொறுத்துக் கொண்டதாகக் கூறிய வன்னியரசு, திமுகவால் ஏற்பட்ட துரோகம் மற்றும் ஓரங்கட்டல்கள் குறித்த நீண்ட பட்டியல் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்தார். 2016 முதல் ஆட்சியில் பங்கு கோரி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் வாக்கு பரிமாற்றம் இருக்கும்போது அதிகாரப் பகிர்வு மட்டும் ஏன் மறுக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம்சாட்டுவது தவறானது என திமுக அரசிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். விசிக அளித்த தீவிர அழுத்தத்தின் காரணமாகவே இவ்வழக்கில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்த வன்னியரசு, மிசா சட்டம் ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது என்றார். அச்சட்டத்தினால் அன்றைய காலகட்டத்தில் தனது தந்தையும், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
