CRIME
“ரூ. 5 லட்சம் கொடு… இல்லைனா கொன்றுவேன்..!” விவசாயி வீட்டு வாசலில் மிரட்டல் கடிதம் ஒட்டிய நபர்… மலைப்பகுதியை முழுமையாக லாக் செய்த 150 போலீசார்.. பகீர் சம்பவம்..!!
கர்நாடகா மாநிலத்தில் தன்னை மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்டு, நாட்டு வெடிகுண்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த கனகலபண்டே வெங்கடேஷ் என்ற நபரை, சுமார் 20 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்த போலீசார் செவ்வாய்க்கிழமை இரவு அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கனகலபண்டே கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் பம்ப்செட் அருகே இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு வெங்கடேஷ் திடீரென மாயமானார். இந்த வழக்கில் ஏற்கனவே வெங்கடேஷின் மனைவி சாவித்ரம்மா, அவரது இரு குழந்தைகள் மற்றும் இரு கூட்டாளிகளைப் போலீசார் கைது செய்திருந்த நிலையில், வெங்கடேஷ் மட்டும் கடமலகொண்டே மலைப்பகுதியில் ரகசியமாகத் தலைமறைவாகி இருந்தார்.
தலைமறைவாக இருந்த வெங்கடேஷ், பூஷப்பா என்ற விவசாயியின் பண்ணை வீட்டு வாசலில் மாவோயிஸ்ட் அமைப்பின் பெயரால் மிரட்டல் கடிதம் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில் தமக்கு ரூ. 5 லட்சம் பணம் தராவிட்டால் கொலை செய்துவிடுவதாக பண்ணை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாவகடா அருகே உள்ள மலைப்பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் ஒரு பிரம்மாண்ட தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். 150-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த மலைப்பகுதியை முழுமையாகச் சூழ்ந்து நடத்திய அதிரடி சோதனையில் வெங்கடேஷ் சிக்கினார். போலி மாவோயிஸ்ட் வேடமிட்டுப் பணம் பறிக்க முயன்ற இவரது கைது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
