LATEST NEWS
“ஐய்யோ கொடுமையே…! வாய்க்குள் வளரும் தாடி முடி… ஜபல்பூரில் நடந்த மருத்துவ அலட்சியம்..! நீதி கேட்டு அலைக்கழிக்கப்படும் ஏழை வியாபாரி..!!”
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 56 வயதான முகேஷ் குமார் என்ற காய்கறி வியாபாரிக்கு, சுமார் 27 மாதங்களுக்கு முன்பு உதட்டின் உட்பகுதியில் சிறிய புண் ஏற்பட்டது. இதற்குச் சிகிச்சை பெற அவர் மருத்துவக் கல்லூரி புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவரான டாக்டர் அர்பன் மிஸ்ராவை அணுகினார். பயாப்ஸி பரிசோதனைக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறிய மருத்துவர், முகேஷிடம்.ரூ 75,000 ரொக்கமாகவும் மீதமுள்ள தொகையை ஆயுஷ்மான் கார்டு மூலமாகவும் பெற்றுக்கொண்டு அறுவை சிகிச்சை செய்தார். ஆனால், அறுவை சிகிச்சையின் போது உதட்டின் உட்பகுதியில் இருந்த பாதிக்கப்பட்ட திசுவை நீக்கிவிட்டு, தாடிப் பகுதியிலுள்ள தோலை அங்கே அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது வாயின் உட்பகுதியில் தொடர்ந்து முடிகள் வளர்ந்து, உணவருந்தக்கூட முடியாமல் அவரது வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது.
இந்த கொடூரமான பாதிப்பிற்குத் தீர்வு காண முகேஷ் குமார் மும்பையிலுள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை மற்றும் போபால் எய்ம்ஸ் போன்ற நாட்டின் முன்னணி மருத்துவமனைகளுக்கும் சென்று ஆலோசனை பெற்றார். ஆனால், இரு இடங்களிலும் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். பிளாஸ்டிக் சர்ஜன்கள் அவருக்கு லேசர் சிகிச்சை மேற்கொள்ளப் பரிந்துரைத்த போதிலும், ஒரு கட்டத்திற்கு ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை செலவாகும் என்றும், அதன் பிறகும் 50 சதவீத முடிகள் மட்டுமே நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தனர். ஏழை காய்கறி வியாபாரியான முகேஷால் அவ்வளவு அதிக பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத சூழல் நிலவுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மருத்துவ அலட்சியம் குறித்து நீதியும் நிவாரணமும் கேட்டு முகேஷ் குமார் மதன்பூர் காவல் நிலையம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தொடர்ச்சியாக அலைந்து வருகிறார். சம்பந்தப்பட்ட மருத்துவர் பெரும் செல்வாக்குமிக்கவர் என்பதால், காவல்துறையினர் மனுவைப் பெற்றுக்கொண்டு எந்தக் சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் அவரைத் திருப்பி அனுப்பிவிடுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். சமீபத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்குத் தனது புகாரை அளிக்கச் சென்றபோதும், அவரது புகார் ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதால், நீதி கிடைக்காமல் அவர் தவித்து வருகிறார்.
