LATEST NEWS
“நாங்க என்ன தக்காளி தொக்கா?” கொதிக்கும் தவெக முன்னோடிகள்… தயக்கத்தில் விஜய் தலைமை… அதிர்ச்சியில் அதிமுக புள்ளிகள்…!!
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய கட்சிப் பொறுப்புகளை வழங்குவது குறித்து தவெகவுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு உடனடியாக உயர்பொறுப்புகள் வழங்கப்பட்டால், கட்சியின் ஆரம்பக் காலத்திலிருந்து உழைத்த நிர்வாகிகளின் உழைப்பு புறக்கணிக்கப்படும் என்ற மனக்குறை தொண்டர்களிடையே உருவெடுத்துள்ளது.
கட்சியின் தொடக்க காலம் முதல் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றி வரும் உண்மைத் தொண்டர்கள் மற்றும் முன்னோடிகளுக்கே பொறுப்புகளில் முதலுரிமை அளிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த உட்பூசல் மற்றும் முரண்பாடுகள் காரணமாகவே, புதிதாக இணைந்த முக்கியப் பிரமுகர்களுக்கான கட்சிப் பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தவெக தலைமை கடும் தயக்கமும் தாமதமும் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் மாற்றுக் கட்சிப் பிரமுகர்களின் வருகை தொடர்பான ‘குதிரை பேர’ குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளும், சர்ச்சைகளும் நிலவி வருவதால், புதிய நிர்வாகிகளை இணைக்கும் படலத்தை கட்சித் தலைமை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, ஏற்கனவே தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அதிமுக மூத்த நிர்வாகிகள் தங்களுக்கு உரிய அங்கீகாரமும் பொறுப்புகளும் எப்போது கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
