LATEST NEWS
திடீரென ஆப்பு வைத்த ஏர்டெல்! 1.5 ஜிபி டேட்டா திட்டங்கள் முற்றிலும் நீக்கம்… எகிறப்போகும் ரீசார்ஜ் கட்டணம..!!
பாரதி ஏர்டெல் நிறுவனம், தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியை வழங்கி வந்த பிரபல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை திடீரென நீக்கியுள்ளது. இதனால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிக டேட்டா பயன்பாட்டைக் கொண்ட, அதிக விலை கொண்ட திட்டங்களையே தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலமாக தெரியவந்துள்ள இந்த மாற்றத்தின்படி, ரூ. 299, ரூ. 319, ரூ. 579, ரூ. 619 மற்றும் ரூ. 649 ஆகிய ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்கள் சந்தையிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருவதால், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கட்டண உயர்வை நோக்கிய தவிர்க்க முடியாத ஒரு மாற்றமாக நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. ஆரம்ப நிலை திட்டங்களான ரூ. 199 மற்றும் ரூ. 219 ஆகிய திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும், மிகவும் பிரபலமான ரூ. 299 திட்டத்தைப் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள், இனி தினமும் டேட்டா தேவைப்பட்டால் ரூ. 349 திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இது பயனர்களுக்குச் சுமார் 16 சதவீத விலை உயர்வாக அமைகிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் நீக்கப்பட்டது குறித்து ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இது நிலையான ARPU வளர்ச்சியை நோக்கிய முயற்சி எனக் கூறப்படுகிறது. நீக்கப்பட்ட ரூ. 299 திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்கியது. அதே சேவைகள் ரூ. 319 – 30 நாட்கள், ரூ. 579 – 56 நாட்கள் மற்றும் ரூ. 619 – 60 நாட்கள் ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்தன. தற்போது பரிந்துரைக்கப்படும் ரூ. 349 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் 5G டேட்டா வசதியை வழங்குகிறது.
