LATEST NEWS
“த.வெ.க-வின் மெகா வெற்றி…” இதை யாருமே எதிர்பார்க்கவில்லை…” டெல்லி கூட்டத்தில் தமிழக அரசியல் குறித்து வியந்து பேசிய அமித்ஷா…!!
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இரண்டு ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நேற்று வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமைப் பொது அலுவலகத்தில் இதற்காகச் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக டெல்லி பாரத் மண்டபத்தில் பத்திரிகையாளர்களுடனான சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நபின், அக்கட்சியின் 12 ஆண்டுகால சாதனைகள் மற்றும் ஆட்சி முறை குறித்துப் உரையாற்றி, அதுகுறித்த குறும்படக் காட்சியையும் திரையிட்டுக் காண்பித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சர்கள் நிதின் கட்காரி, ஜே.பி.நட்டா, அஸ்வினி வைஷ்ணவ், பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், செய்தியாளர்களுடன் பல்வேறு அரசியல் நிலவரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. குறிப்பாக, மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க பெற்ற வெற்றி குறித்துப் பேசப்பட்டதோடு, செய்தியாளர்கள் தத்தமது மாநில அரசியல் சூழ்நிலைகளை விவாதித்தனர்.
அப்போது, “தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) இந்த அளவிற்குப் பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என்று எவருமே கணித்திருக்கவில்லை” என மத்திய அமைச்சர் அமித்ஷா வியப்புடன் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும், தமிழகத்தில் பா.ஜ.க சந்தித்த தேர்தல் தோல்வி குறித்து நேரடியாக ஆய்வு செய்வதற்காகக் கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அடுத்த மாதத்தில் தமிழகம் வரவிருப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
