Uncategorized
“அம்மா… என்னைய கூட்டிட்டு போயிருமா” -விடுதி போனில் வீட்டு நினைவுகளோடு கண்ணீர் வடித்த சிறுவர்கள்.. 13 கோடி நெஞ்சங்களை உருகவைத்த எதார்த்த வீடியோ..!!
விடுமுறை நாட்கள் முடிந்து விடுதிக்கு திரும்பும் குழந்தைகள், தங்களின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசும்போது ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான தருணம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுமார் 10 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், தங்களது விடுதியில் உள்ள பொதுத் தொலைபேசி வாயிலாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசும்போது, தங்களின் அழுகையையும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகள் காண்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளன.
வீட்டு நினைவுகளோடு, கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி அச்சிறுவர்கள் போனில் பேசும் இந்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை ‘daywithaviip’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. “ஹாஸ்டல் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கதையைக் கொண்டது; சில நேரங்களில் எல்லையற்ற மகிழ்ச்சி, சில நேரங்களில் உணர்ச்சிகரமான தருணங்கள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் என அது ஒரு தனி அத்தியாயம்” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 13 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களையும், ஒரு கோடிக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
https://www.instagram.com/reel/DamJ-KHSbZf/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது விடுதி வாழ்க்கையை நினைவுகூர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “விடுதி வாழ்க்கையை நேரடியாக அனுபவித்தவர்களால் மட்டுமே இந்த வலியை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்” என்றும், “குழந்தைப் பருவத்தில் பிள்ளைகள் விடுதியில் தங்கிப் படிப்பதை விட, பெற்றோரின் அரவணைப்பிலேயே வளர வேண்டும்” என்றும் பலரும் தங்களது ஆதங்கங்களை எதார்த்தமாகப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பலரது மனங்களையும் உருகச் செய்துள்ளது.
