LATEST NEWS
8 தலீத்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தீங்களே… ஆனா இது நடந்துச்சா…? அமைச்சர் ராஜ்மோகன் ஒரு தலீத்தா..? சந்தேகம் கிளப்பிய இயக்குனர் பா.ரஞ்சித்..!!
சென்னையில் நீலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், பட்டியலின அமைச்சர்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் திறக்கப்படாமல் இருக்கும் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைக்காதது ஏன் என்றும், தலித் அமைச்சர்களுக்கு இதுகுறித்து ஏன் எந்தக் கோபமும் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் பாசிசத்திற்கு எதிரானவர் என்றும் கூறிக்கொண்டு மாணவர்களை ஒடுக்குவதற்கும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் யாருக்கு உரிமை உள்ளது என்றும் அவர் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதலில் அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தானா என்பதே சந்தேகமாக உள்ளது” எனக் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், எட்டு தலித்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது மட்டுமே உண்மையான மாற்றமாகிவிடாது என்றும், ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகியும் தவெக பட்டியலின அமைச்சர்கள் இதுவரை தலித் பிரச்சினைகளுக்காக ஏதேனும் குரல் கொடுத்துள்ளார்களா என்றும் சாடினார்.
சாதி மற்றும் மத ரீதியான சமரசங்களோடுதான் நீங்கள் ஆட்சி நடத்துவீர்கள் என்பதை எங்களுக்கு உணர்த்த வருகிறீர்களா என்ற நேரடிக் கேள்வியையும் அவர் முன்வைத்தார். அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு தலித் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புறக்கணிக்கும் போக்கு ஏற்கத்தக்கதல்ல என்பதைத் தன் பேச்சின் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
