LATEST NEWS
பரபரப்பு..! “இந்த உருட்டல் மிரட்டலுக்கு நாங்க பயப்படமாட்டோம்” அடிக்கப் பாய்ந்த திமுக எம்.எல்.ஏ…? சபையிலேயே கர்ஜித்த அமைச்சர் ராஜ்மோகன்..!!
தமிழக சட்டப்பேரவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட காரசாரமான மோதல் மற்றும் தள்ளுமுள்ளு முயற்சி பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர் முன்ஸ்தபா (எ) மதார் பதுருதீன் பேசுகையில், இஸ்லாமியர்களை இழிவாகப் பேசியதாக திமுக மீது குற்றம்சாட்டினார். இதற்கு ஆளுங்கட்சியான திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே அவையில் கடுமையான வாக்குவாதம் வெடித்தது.
இந்த மோதலின் உச்சகட்டமாக, தவெகவைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து, “திமுகவினர் உட்பட அவையில் உள்ள அனைவரும் சபை மாண்பைக் காப்பாற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினார். அமைச்சரின் இந்த கருத்தால் மேலும் ஆத்திரமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், அமைச்சர் ராஜ்மோகனை நோக்கி அடிக்கப் பாய்ந்ததாகத் தெரிகிறது. இதனால் அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியதுடன், இரு கட்சி உறுப்பினர்களும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவானது.
திமுக உறுப்பினரின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன், “இதுபோன்ற உருட்டல் மற்றும் மிரட்டல்களுக்கெல்லாம் தவெகவினர் ஒருபோதும் பயப்பட மாட்டோம்” என்று பேரவையில் ஆணித்தரமாக முழங்கினார். சட்டமன்றத்தில் தவெக மற்றும் திமுக இடையே அரங்கேறிய இந்த நேரடி மோதல் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
