LATEST NEWS
திமுக – அதிமுக கூட்டணி கட்டுக்கதை!.. முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த நெத்தியடி பதில்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!
சேலத்திற்கு அருகிலுள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 15 ஆண்டுகளுக்குத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், தவெக அரசு புதிய நடுவர் குழுவை அமைக்கத் தீர்மானம் போட்டிருப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும், ‘அதிமுக – திமுக கூட்டுக் களவாணி’ என்று முதலமைச்சர் விஜய் விமர்சித்ததற்குப் பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டுக் களவாணி இல்லை, விஜய்தான் களவாணி” என்று சாடினார். அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்களைத் தங்களது கட்சிக்கு இழுத்ததுதான் உண்மையான களவாணித்தனம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து தவெக அரசின் 60 நாள் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் நான்காம்தரப் பேச்சாளர் போலப் பேசி வருவதாகவும், கூட்டணி கட்சித் தலைவர்களை அனுசரிக்கும் வரைதான் தவெக ஆட்சி நிலைத்திருக்கும் என்றும் விமர்சித்தார். “திமுக தீயசக்தி” என்ற அதிமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், திமுக – அதிமுக கூட்டணி என்பது ஒரு கட்டுக்கதை என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும், தவெகவிற்குச் சென்றால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு விஜய் பெரிய அல்வா கொடுத்துவிட்டார் என்று கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் விஜய்யின் மேக்கப் மேனுக்குக் கூட அரசுப் பதவி கொடுக்கப்படும் என்றும் காரசாரமாகத் தெரிவித்தார்.
