LATEST NEWS
“என் தொகுதிக்குள்ள கால வச்சா அவ்வளவுதான்..!” சொந்த கட்சி நிர்வாகிக்கே பெண் அமைச்சர் பகிரங்க மிரட்டல்.. வெளியான லீக் ஆடியோ.. அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு..!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி தவெக எம்எல்ஏவும், அமைச்சருமான ஜெகதீஸ்வரி, சாத்தூர் தவெக வடக்கு ஒன்றியச் செயலாளர் ராஜகுருவிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தொகுதிக்குள் தலையிடுவதாகக் கூறி, ராஜபாளையம் தென்கிழக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன் என்பவரைக் கடுமையாகச் சாடிய அமைச்சர், தூக்கி வச்சு, ஜட்டியோட வச்சு அடிச்சு கொன்னு வெளியே எடுத்துருவேன் என மிகக் கடுமையான வார்த்தைகளில் கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது இந்த ஆடியோ உரையாடலில் பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோ உரையாடலில் பேசிய ராஜகுரு, “நாங்கள் கீரியும் பாம்புமாக இருக்கிறோம்” எனக் கூறி லட்சுமணனின் எண்ணை அமைச்சருக்கு வழங்க ஒப்புக்கொள்கிறார். இந்தச் சர்ச்சை ஆடியோ வெளிவந்ததைத் தொடர்ந்து, ராஜகுரு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்புகள் வெளியாயின. இருப்பினும், அவர் மீது ஏற்கனவே தொடர் சர்ச்சைகள் நிலவியதால், கடந்த 21-ம் தேதியே விருதுநகர் மாவட்டச் செயலாளர் சின்னப்பரால் அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுவிட்டதாகக் கட்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சொந்தக் கட்சி நிர்வாகிக்கே பகிரங்கமாக மிரட்டல் விடுத்த இந்தச் சம்பவம் ஒருபுறமிருக்க, அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத் தக்கது. மற்றொரு பெண் அமைச்சரான கீர்த்தனாவுடன் ஏற்பட்ட தகராறு, நிகழ்ச்சியின் பேனரில் தனது பெயர் இரண்டாவதாகப் போடப்பட்டதற்காக மேடையிலேயே ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராக்கெட் ராஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது எனப் பல சர்ச்சைகளில் இவர் சிக்கியுள்ள நிலையில், தற்போதைய ஆடியோ விவகாரம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
