LATEST NEWS
“கஞ்சா போதையில் வீடு புகுந்து வெறித்தனம்..! காவல்துறையின் அலட்சியத்தால் வீதியில் இறங்கிய பெண்கள்.. 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்தம்பித்த சென்னை..!!”
சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் அவரது மனைவி மோனிஷா ஆகியோர், மோனிஷாவின் தம்பி மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரின் மகனுக்கும் இடையே இருந்த திருமணத்தை மீறிய கள்ள உறவைக் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி, அவரது ஐந்து மகன்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் கஞ்சா போதையில் சிவா மற்றும் மோனிஷாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். தம்பதியினரைச் சரமாரியாகத் தாக்கிய அந்த போதை கும்பல், வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, வாசலில் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தையும் தீயிட்டுக் கொளுத்தி அட்டகாசம் செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிவா மற்றும் மோனிஷா காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் தொடர்ச்சியாக விற்கப்படும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் குறித்து தம்பதியினர் ஏற்கனவே புகார் அளித்திருந்த ஆத்திரத்திலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, மோனிஷா மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் எர்ணாவூர் சந்திப்பில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பகுதியில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் நிலையத்திற்கு வந்தால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தங்களது மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
