LATEST NEWS
நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… சிறுவனைச் சூழ்ந்து வேட்டையாடப் பாய்ந்த தெருநாய்க்கூட்டம்.. காப்பாற்றாமல் அலறியோடிய மக்கள்…!!
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாடின் சின்ச்வாடே நகர் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறுவனை 4 முதல் 5 தெருநாய்கள் கூட்டமாக சூழ்ந்து தாக்கியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் அலறியதைக் கேட்டு உடனடியாக ஓடிவந்த அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டி அவனை மீட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோன்று சிகாலி பகுதியிலும் ஒரு சிறுமி தெருநாய்களிடம் போராடிய சம்பவம் நடந்துள்ள நிலையில், இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு தெருநாய்களின் தொல்லை தீவிரமடைந்துள்ளது.
பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி எல்லைக்குள் தெருநாய்க்கடி சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. 2015-16 ஆம் நிதியாண்டில் 10,165 ஆக இருந்த நாய்க்கடி வழக்குகள், 2024-25 இல் 28,099 ஆக உயர்ந்து, கடந்த 2025-26 நிதியாண்டில் 38,004 என்ற உச்சத்தைத் தொட்டது. மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே 13,615 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது இதே வேகத்தில் தொடர்ந்தால், நடப்பு ஆண்டில் நாய்க்கடி வழக்குகளின் எண்ணிக்கை 40,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அவற்றுக்குக் கருத்தடை செய்து, தனியாகப் பராமரிக்க மாநகராட்சி அளித்த வாக்குறுதிகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, நேரு நகரில் உள்ள கருத்தடை மையத்தின் வசதிகளை மேம்படுத்தி அறுவை சிகிச்சைகளை தீவிரப்படுத்த உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு யஷ்வந்தராவ் சவான் நினைவு மருத்துவமனையில் இலவச ரேபிஸ் தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தெருநாய்கள் தொல்லைக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
