CRIME
பள்ளிக்குள்ளேயே இப்படியொரு அராஜகமா..?! மகனை கண்டித்த ஆசிரியரை ஓட ஓட வைத்து பெல்ட்டால் அடித்த மாணவனின் தந்தை… சிசிடிவி ஆதாரத்துடன் அதிரடியாகத் தூக்கிய காவல் துறை..!!
மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கோபால்நகர் ஹரிபாடா கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை அன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஆசிரியர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த மாணவனின் தந்தை பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை பெல்ட்டால் தாக்கியுள்ளார். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை அன்று பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பதிவு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, சில மாணவர்கள் அங்கே கூச்சல் போட்டு அமளி சகிதமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அருண் தாஸ் என்ற பங்களா மொழி ஆசிரியர் தலையிட்டு, மாணவர்களின் இந்த ஒழுங்கீனமான நடத்தைக்காக அவர்களைக் கண்டித்தார். இதனால் கோபமடைந்த ஒரு மாணவனின் தந்தையான தேவ்பிரதா தாஸ் என்பவர் உடனடியாகப் பள்ளிக்கு விரைந்து வந்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்ற தேவ்பிரதா தாஸ், அங்கு இருந்த ஆசிரியர் அருண் தாஸுடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் அணிந்திருந்த பெல்ட்டைக் கழற்றி ஆசிரியர் அருண் தாஸை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள் உடனடியாகத் தலையிட்டுத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியதுடன், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
