CRIME
நெஞ்சை நடுங்கவைக்கும் வைரல் வீடியோ..! பிரம்மபோஜ விருந்தில் கொடூரம்… ஒப்பந்ததாரரை வாளால் 22 முறை வெட்டிக் கொன்ற பகீர் சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சிக்ரிகஞ்ச் பகுதிக்குட்பட்ட இடத்தில், பிரம்மபோஜ நிகழ்வின் போது ஒப்பந்ததாரர் சிவகுமார் திவாரி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வெளியான அந்த வீடியோவில், ராகுல் சௌதாரி என்ற நபர் சிவகுமார் திவாரியை வாளால் 22 முறை தொடர்ச்சியாகத் தாக்கும் கொடூரக் காட்சிகள் பதிவாகியுள்ளன. அங்கிருந்த சிலர் தடுக்க முயன்றும், கடுமையான வெட்டுக் காயங்களால் சிவகுமார் திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இக்கொலைச் சம்பவத்திற்குப் பின்னால் பழைய முன்விரோதம் இருப்பது காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோரக்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் தெரிவிக்கையில், 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆதேஷ் சௌதாரி என்பவரின் கொலையில், சிவகுமார் திவாரியின் உறவினர்கள் சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்ததாகவும், அதற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இக்கொலை நடந்துள்ளதாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் மேலும் இருவரின் பெயர்கள் சேர்ந்த நிலையில், இதுவரை மொத்தம் 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல் துறை நிர்வாக ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக சிக்ரிகஞ்ச் காவல் நிலைய அதிகாரி அஞ்சூல் சதுர்வேதி உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இக்கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவை முக்கிய ஆதாரமாக வைத்து, சம்பவத்தில் தொடர்புள்ள அனைத்து நபர்களின் பங்கையும் கண்டறிந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை உறுதியளித்துள்ளது.
