LATEST NEWS
“கையில் தங்கம்… தங்குவதற்கு தார்பாய் வீடு..!” அசாம் வெள்ளத்தின் நடுவே வைரலாகும் 17 வயது பெண்ணின் கதை..!!
அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த போக்தோய்போரியா கிராமத்தின் 2-வது மோஜியா பேட்டி பகுதியில் உள்ள ஜன்மோனியின் வீடு வெள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கியது. இதனால், கடந்த ஜூலை 19 முதல் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி, ஆற்றின் கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட தார்பாய் (திர்பால்) கூடாரத்தின் கீழ் தங்கி வருகின்றனர். வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கையே முடங்கிய நிலையிலும், ஜன்மோனி தனது பயிற்சியையும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்கும் இலக்கையும் கைவிடவில்லை.
கடந்த ஆகஸ்ட் 7 முதல் 9 வரை புதுடெல்லியில் உள்ள தால்கடோரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஜன்மோனி கலந்துகொண்டார். இதில் ஆஷிஹாரா கராத்தே பிரிவில் திறம்பட போட்டியிட்டு அவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்தச் சாம்பியன்ஷிப்பில் அசாம் மாநிலத்திலிருந்து மொத்தம் 4 வீரர்கள் பங்கேற்றனர்; அதில் ஒருவர் வெண்கலப் பதக்கமும், ஜன்மோனி தங்கப் பதக்கமும் வென்று தனது குடும்பத்திற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஆகஸ்ட் 9 மாலை போட்டியை முடித்துவிட்டு ஜன்மோனி திரும்பியபோது, அவரை வரவேற்க ஆடம்பர வீடோ வசதிகளோ இருக்கவில்லை; சொந்த அறை, கட்டில் அல்லது பொருட்கள் வைக்க அல்மாரி கூட இல்லாமல் இன்னமும் தார்பாய் கூடாரத்திலேயே தங்கியிருந்த குடும்பத்தினர் மத்தியில், அவர் தனது கையில் மின்னும் தங்கப் பதக்கத்துடன் வந்து சேர்ந்தார். இந்தத் துயரமான சூழ்நிலையிலும் அவரது இச்சாதனை குடும்பத்தினரின் முகத்தில் பெரு மகிழ்ச்சியைக் கொண்டுவந்துள்ளது. அசாமில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஜன்மோனியின் இந்த வெற்றி பெரும் நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்துள்ளது.
