CRIME
“வீட்டுல வழுக்கி விழுந்துட்டா…!” கள்ளக்காதலிக்காக 7 மாத கர்ப்பிணி மனைவி கொன்று… நாடகமாடிய ராணுவ கணவன்..! கழுத்து காயத்தால் அம்பலமான கொடூரம்..!!
மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த ஞானேஷ்வர் மத்னே என்பவர் இந்திய ராணுவத்தின் 6-வது மராத்தா பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபாலி மத்னே ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில், தீபாலி வீட்டில் வழுக்கி விழுந்துவிட்டதாக ஞானேஷ்வர் அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தீபாலியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்தனர். ஆனால், அவரது கழுத்தில் தெளிவான காயத் தழும்புகள் இருப்பதை கவனித்த மருத்துவர்களுக்கு மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணின் கழுத்தில் இருந்த காயத்தழும்புகள் சந்தேகத்தை ஏற்படுத்தின. இதற்கிடையே உயிரிழந்த தீபாலியின் சகோதரர் ராகுல் மத்னே போலீசில் புகார் அளித்தார். அதில், ஞானேஷ்வர் மத்னேவுக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதுதொடர்பாக தனது மனைவியை அவர் அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தனது சகோதரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து, ஞானேஷ்வர் மத்னே மற்றும் அவரது பெற்றோர் மீது புகாரளித்தார்.
குடும்பத்தினரின் புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, ராணுவ வீரர் ஞானேஷ்வர் மத்னேயைக் கைது செய்தனர். மனைவி வழுக்கி விழுந்ததாகக் கூறி நாடகமாடிய நிலையில், கழுத்தில் இருந்த காயத்தழும்புகளே இந்த கொலையை அம்பலப்படுத்தியுள்ளது. தீபாலி உண்மையிலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாரா மற்றும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
