LATEST NEWS
“நான் ஒரு ஏழை ஐயா…! சாக்கடை நீரில் மூழ்கிய ரூ.45,000 போன்… தேங்கிய மழைநீரில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஊழியரின் கண்ணீர் குரல்… முசாபர்நகரில் நெஞ்சை உருக்கும் வாலிபரின் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பெய்த கனமழையால் சாலைகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நின்றதில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரின் மொபைல் போன் நீரில் மூழ்கித் தொலைந்துபோன உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. விஷால் என்ற அந்த வாலிபர் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக உணவக டெலிவரி பணியைச் செய்து வருகிறார். வழக்கம்போல் வாடிக்கையாளருக்கு உணவை டெலிவரி செய்யச் சென்றபோது, தேங்கியிருந்த சாக்கடை கலந்த மழைநீரில் எதிர்பாராதவிதமாக அவரது போன் விழுந்துவிட்டது. நீரில் கைகளை விட்டு வெகுநேரம் தேடியும் போன் கிடைக்காததால் மனமுடைந்த விஷால், நடுரோட்டிலேயே கதறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெலிவரி ஊழியர்களுக்கு அவர்களின் ஸ்மார்ட்போன் என்பது வெறும் கருவி மட்டுமல்ல, அதுவே அவர்களின் வாழ்வாதாரத்துக்கான முக்கிய வழியாகும். அதன் மூலமே அவர்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன. விஷால் தொலைத்த அந்த போனின் மதிப்பு சுமார் ரூ.45,000 ஆகும். வெறும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் தவணை முறையில் இந்த போனை அவர் வாங்கியிருந்தார். இதுவரை மூன்று தவணைகளை மட்டுமே செலுத்தியுள்ள நிலையில், மீதிப் பெரும்பகுதிக் கடன் இன்னும் பாக்கியுள்ளது. கடன் சுமை ஒருபுறம், வாழ்வாதாரம் பறிபோனது மறுபுறம் என அவர் நடுரோட்டில் அழுத காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
தன்னுடைய இந்த நிலைக்கு முசாபர்நகர் நகராட்சியின் அலட்சியப்போக்கும், முறையான வடிகால் வசதி இல்லாததுமே காரணம் என்று கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார் விஷால். “நான் ஒரு ஏழை, நகராட்சி நிர்வாகம் எனது போனைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் அல்லது அரசு எனக்கு நிதியுதவி செய்ய வேண்டும்” என்று அவர் அழுதுகொண்டே கோரிக்கை வைத்துள்ளார். நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒரு ஏழையின் உழைப்பும் வாழ்வாதாரமும் வீணடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் மக்கள் அரசுக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
