LATEST NEWS
என் கணவன் ஒரு “குழந்தை பாலியல் குற்றவாளி” என டிக்டாக்கில் கதறிய இன்ஃப்ளூயன்சர்.. வீடியோ வைரலான சில நாட்களிலேயே நடந்த பகீர் சம்பவம் – அமெரிக்காவில் அதிர்ச்சி…!!
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த 43 வயது பிரபல டிக்டாக் இன்ஃப்ளூயன்சர் சாரா கில்சன், தனது கணவர் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்று சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டிய சில நாட்களிலேயே, கணவனால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாராவின் கணவர் ஜெரமியா ‘ஷான்’ டஃபி, சிறுமிகள் கூடைப்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தபோது ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக ஜூன் மாதம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விசாரணையைத் தொடர்ந்து, சாரா தனது பாதுகாப்பிற்காகக் கடந்த ஜூன் 10 அன்று நீதிமன்றம் மூலம் கணவருக்கு எதிராக அவசரப் பாதுகாப்பு உத்தரவைப் பெற்றார், இதன் மூலம் அவர் சாராவின் வீட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், கடந்த ஜூலை 11 அன்று சாரா தனது டிக்டாக் பக்கத்தில், நெட்பிளிக்ஸ் ஆவணப்படம் போன்ற ஒரு ட்ரெண்டைப் பயன்படுத்தி, “விரைவில் விவாகரத்து பெறப்போகும் எனது கணவர் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்” என்று ஒரு வீடியோவை வெளியிட்டார், இது இணையத்தில் மிக வேகமாக வைரலானது. இந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே, அதாவது ஜூலை 23 அன்று நள்ளிரவில், நீதிமன்ற உத்தரவை மீறி டஃபி சாராவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் சாரா அலறும் சத்தம் அவசரக் கட்டுப்பாட்டு அறைக்குக் கேட்டுள்ளது, அடுத்த சில நிமிடங்களில் சாராவின் சிறு வயது மகன் போலீசாருக்கு போன் செய்து, தனது வளர்ப்புத் தந்தை தாயைச் சுட்டுவிட்டதாகக் கதறியுள்ளார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது சாரா மற்றும் டஃபி இருவருமே தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தனர். டஃபி முதலில் சாராவைச் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு வழங்கப்படும் நீதிமன்றப் பாதுகாப்பு உத்தரவுகளின் நிஜமான பாதுகாப்புத் தன்மை குறித்தும், துஷ்பிரயோகங்களை வெளியில் தைரியமாகப் பேசும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் உலகளவில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
