LATEST NEWS
தமிழ்நாட்டு ரேஷன் கடைய பாத்து பியூஷ் கோயல் என்ன சொன்னாரு தெரியுமா..? டெல்லி மாநாட்டில் மாஸ் காட்டிட்டோம்ல… முன்னாள் அமைச்சர் சக்கரபாணி உடைத்த சுவாரசிய பின்னணி..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது, இங்குள்ள நவீன மற்றும் மாதிரி நியாய விலைக் கடைகளின் புகைப்படங்களைப் பார்த்துள்ளார். தமிழகக் கடைகளின் சிறப்பான உள்கட்டமைப்பைக் கண்டு வியந்த அவர், டெல்லியில் நடைபெறவிருந்த மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் தேசிய மாநாட்டிற்கு இந்த நியாய விலைக் கடைகளின் புகைப்படங்களை எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டார்.
மத்திய அமைச்சரின் வேண்டுகோளின்படி, அந்த மாநாட்டில் தமிழக நியாய விலைக் கடைகளின் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து பவர்பாயிண்ட் பிரசென்டேஷன் செய்து காண்பிக்கப்பட்டது. அதனைப் பார்த்த பியூஷ் கோயல், இந்திய அளவிலான அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்கள் முன்னிலையில் தமிழ்நாட்டின் நியாய விலைக் கடைகளின் மாதிரியைப் வெகுவாகப் பாராட்டினார். மேலும், தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ளது போன்றே இந்தியா முழுவதும் இதே தரத்தில் நியாய விலைக் கடைகளை அமைக்க வேண்டும் என்று மற்ற மாநிலங்களுக்கும் அவர் அறிவுறுத்தியதாக முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
