LATEST NEWS
“விஜய் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து…” ஈரோடு நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் போட்ட அதிரடி ‘வெடி’..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான வெற்றித் தளபதியின் தலைமையில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாக உருவாவதற்கு அயராது உழைத்து வருகிறார். விவசாயிகள் மீது அவர் வைத்துள்ள பேரன்பு அளப்பரியது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்தின்போது தஞ்சையில் பேசுகையில், எனக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருக்குமேயானால் நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று குறிப்பிட்டுள்ளார்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கேயம் காளைகள் மற்றும் பசுமாடுகளின் சிறப்புகளையும், மருத்துவர்கள் அறிவுறுத்துவது போல காங்கேயம் பசுவின் பாலை குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இதனிடையே, காவிரி விவகாரத்தில் கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்துதான் அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் தஞ்சை காவிரி டெல்டா பகுதியில் வாழும் விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்பது அனைவரின் கனவு. அந்த கனவு நிறைவேறும் காலம் தொடங்கிவிட்டது, நல்ல ஒரு முதலமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கிறார்” என்று பதிலளித்தார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “அவர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வருகிறது. ஆகவேதான் அவர் வாய் திறப்பதில்லை” என்று அமைச்சர் செங்கோட்டையன் நகைச்சுவையாகப் பதிலளித்தார். முதலமைச்சரின் இக்காலம் என்றைக்கும் பொற்காலமாக அமையும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
