LATEST NEWS
ரூ.35 கோடி குதிரை பேரம்… ஆட்சி கவிழ்ப்பு புகார்..! செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கொடுத்த கோர்ட்… பின்னணி என்ன..!?
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த ஜூன் 2026-ல் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அதில், சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்க, திருநாவுக்கரசு என்பவர் மூலம் தனக்கு 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு மறுத்ததால் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆட்சி கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் குதிரை பேர விவகாரத்தின் பின்னணியில் திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருப்பதாகக் கூறி காவல்துறை விசாரணை நடத்தியதுடன், இந்த வழக்கில் சிலரைக் கைதும் செய்தது.
தங்களுக்கு எதிராகக் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சத்தில், செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணையின் போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “இந்த புகாரில் கூறப்பட்டுள்ள தொலைபேசி அழைப்புக்கும் செந்தில் பாலாஜிக்கும் எந்த தொடர்பும் இல்லை; அதற்கான ஆடியோ பதிவுகளோ முறையான சான்றுகளோ இல்லை” என்று வாதிட்டார். மேலும், ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெறும் யூகங்களின் அடிப்படையில் ஜோடிக்கப்பட்டவை என்றும், அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கில் தங்களை இணைக்க முயல்வதாகவும் வாதிட்டு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜியின் நேரடிப் பங்கு குறித்து போதிய ஆதாரங்கள் இல்லை என்பதைக் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. எனினும், அவர்கள் இருவரும் இந்த வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை தினமும் சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
