LATEST NEWS
“நாங்க ஆண்ட பரம்பரை இல்ல, அறிவுப் பரம்பரை” சாதி சான்றிதழ் கேட்கும் கும்பலுக்கு திருமாவளவன் மேடையிலேயே கொடுத்த மரண மாஸ் பதிலடி..!
கடலூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடந்த காலப் போராட்டங்களையும் தற்போதைய அரசியல் அங்கீகாரத்தையும் ஒப்பிட்டு உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார். ஆரம்பக் காலத்தில் விசிக-வின் கொள்கைகளுக்கும் கருத்துகளுக்கும் ஊடகங்கள் எவ்வித முக்கியத்துவமும் தரவில்லை என்றும், தங்களைப் பற்றிய ஒரு சிறு செய்தி நாளிதழ்களில் வெளியானால் கூட அதைப் பாதுகாத்து வைத்த நிலை இருந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், இன்று தனது ஒவ்வொரு அடியும், பேச்சும் ஊடக விவாதங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ள பெருமிதத்தை குறிப்பிட்ட அவர், இந்த அங்கீகாரம் இடைவிடாத போராட்டங்களின் மூலமே சாத்தியமானது என்றார்.
தன் மீது திட்டமிட்டு பரப்பப்படும் சாதிய அவதூறுகளுக்கு இந்த மாநாட்டு மேடையில் திருமாவளவன் கடுமையான பதிலடி கொடுத்தார். தான் தமிழனே இல்லை என்றும், தனது பெயர் திருமாவளவன் இல்லை என்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். மறைந்த தனது ஆசிரியரின் மாணவரான ‘திருமாவளவன்’ என்பவரின் சாதி அடையாளத்தை, பாமக போன்ற கட்சியினர் அரசியல் லாபத்திற்காகத் தன் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப் பார்ப்பதாக அவர் பகிரங்கமாகச் சாடினார்.
சாதி ஒழிப்பையே தங்களது முதன்மை லட்சியமாகக் கொண்டு இயங்கும் தாங்கள், சமூக வலைத்தளங்களில் சிலரது விமர்சனங்களுக்காக சாதிச் சான்றிதழைக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், தங்களை ‘ஆண்ட பரம்பரை’ என்று மார்தட்டிக்கொள்ளும் கும்பல் தாங்கள் அல்ல என்று குறிப்பிட்ட திருமாவளவன், மாறாக தாங்கள் வள்ளுவர் மற்றும் புத்தரின் வழிவந்த ‘அறிவுப் பரம்பரை’ என்று மாநாட்டு மேடையில் அதிரடியாக முழங்கினார்.
