LATEST NEWS
போட்ட முதல் கையெழுத்து என்னாச்சு…! விஜய் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இப்படியொரு கொடூரமா…!முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாய்ந்த ப்ளூ சட்டை மாறனின் ஏவுகணை கேள்வி…!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். தனது தேர்தல் பிரசாரக் களம் எங்கும் முந்தைய திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், அதற்கு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என்றும் விஜய் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பிரசாரம் செய்தார். அதற்கேற்ப, அவர் முதலமைச்சராகப் பதவியேற்றதும் போட்ட முதல் மூன்று முக்கியக் கையெழுத்துகளில் ஒன்றாக, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘சிங்கப் பெண் பாதுகாப்பு படை’ என்ற தனிப்பிரிவை உருவாக்குவதற்கான கோப்பு அமைந்தது. இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இத்தனிப்பிரவினர் செயல்பாட்டுக்கு வந்ததை அடுத்து, தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் இணையத்தில் இதைப் பாராட்டித் தீர்த்தனர்.
ஆட்சிப் பொறுப்பேற்றதும் பெண்களுக்காக இத்தகைய அதிரடி நடவடிக்கையை முதலமைச்சர் விஜய் எடுத்திருந்தாலும், நிஜ நிலவரம் வேறு மாதிரியாக இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மீதான வன்கொடுமைகளும் அத்துமீறல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் இளைஞர் ஒருவர் தனது காதலியைப் பொது இடத்தில் கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரின் புகைப்படங்களை வைத்து மிரட்டியதாக எழுந்த புகாரில், அந்த மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.
மாணவியின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும், குற்றவாளியைக் உடனடியாகக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்கக் கோரி சாலையில் அமர்ந்து கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “திமுக ஆட்சியை விமர்சித்து பக்கம் பக்கமாக ட்விட்டர் அறிக்கை வெளியிட்டீர்களே விஜய், இப்போது உங்கள் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா? இந்தத் தாயை நேரில் சென்று சந்திப்பீர்களா அல்லது அவர் உங்களைச் சந்திக்க வர வேண்டுமா?” என்று அவர் காரசாரமாகக் கேட்டுள்ளார்.
‘சிங்கப் பெண் பாதுகாப்பு படை’ போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், அவை வெறும் காகித அளவிலும் அறிவிப்பு அளவிலும் மட்டும் சுருங்கிவிடாமல், களத்தில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் மிகத் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேவேளையில், இதுபோன்ற மிரட்டல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் தற்கொலை என்பது ஒருபோதும் தீர்வாகாது. துணிவோடு சட்ட ரீதியாகச் சவால்களை எதிர்கொள்வதே புத்திசாலித்தனம். மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றும் பட்சத்தில், உடனடியாகத் தகுந்த மனநல ஆலோசகர்களைத் தொடர்புகொண்டு பேசுவது அவசியமாகும்.
