CRIME
கணவனுடன் வாக்குவாதம்… 3 குழந்தைகளுடன் தாய் எடுத்த கொடூர முடிவு..! தர்மபுரியை உலுக்கிய சம்பவத்தின் பின்னணி..!!
தர்மபுரி மாவட்டம், தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள தோட்டத்து கிணற்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், அதியமான்கோட்டை காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 4 உடல்கள் மிதப்பது கண்டறியப்பட்டது. உடனே 4 சடலங்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணனின் மனைவி அம்சா, அவரது மகள்கள் ஜீவிதா, நவீனா மற்றும் மகன் குமரன் என்பது தெரியவந்தது. கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த அம்சா, தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பெற்றோர் வீட்டிற்குத்தான் சென்றிருப்பார் என்று நினைக்கப்பட்டு தேடப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக அவர்களைக் காணவில்லை.
இறுதியில் அம்சாவின் பெற்றோருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றிலேயே 4 பேரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். அம்சா தனது 3 குழந்தைகளையும் கிணற்றுக்குள் தள்ளிய பின்னரே தானும் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அதியமான்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
