CRIME
“நான்தான் கொன்னேன் பாடிய டிஸ்போஸ் பண்ணிடுங்க”.. காதலனை கொன்று ஓனருக்கு சைக்கோ காதலி அனுப்பிய பகீர் வாய்ஸ் மெசேஜ்.. 2.5 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை.. திடுக்கிடும் பின்னணி..!!
மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள நீலகாந்த் சொசைட்டியில், பூட்டப்பட்டிருந்த ஒரு குடியிருப்பில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாகத் தண்ணீர் கசிந்து வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் அஜய் பாட்டீல் வாடகைக்கு இருந்த பெண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், திடீரென அந்தப் பெண் அஜய் பாட்டீலுக்கு அனுப்பிய ஒரு அதிர்ச்சியூட்டும் வாட்ஸ்அப் குரல் வழிச் செய்தி மூலம் கொடூரக் கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், தான் காதலனைக் கொலை செய்துவிட்டதாகவும், அவனது உடல் குளியலறையில் இருப்பதாகவும் கூறி, அந்த உடலை அப்புறப்படுத்துமாறு வீட்டு உரிமையாளரிடமே உதவி கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டீல் உடனே மன்பாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, குளியலறையில் சாக்கு மூட்டையில் திணிக்கப்பட்ட நிலையில் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலைக்கான ஆதாரங்களையும் இரத்தக் கறைகளையும் அழிப்பதற்காகக் குளியலறை குழாயை அந்தப் பெண் திறந்து வைத்துச் சென்றதே இரண்டரை மாத காலத் தண்ணீர் கசிவுக்குக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்குப் பின் கொல்கத்தாவிற்குத் தப்பிச் சென்ற அந்தப் பெண்ணைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
