CRIME
மாடு மேய்க்கப் போன இடத்தில் மர்மம்… காட்டுக்குள் சுருட்டி வைக்கப்பட்ட சடலம்…! 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..! நடந்தது என்ன.?!
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில், 16 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் பிளாஸ்டிக் மூட்டைகளால் மூடப்பட்ட நிலையில் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோல்பூர் மாவட்டம் பாரி பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்ற அச்சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த குடும்பத்தினரும் கிராம மக்களும் அவரைத் தேடத் தொடங்கினர். இரவு 9 மணியளவில் காட்டுப்பகுதியில் தேடியபோது, தலையில் பலத்த காயங்களுடன் பிளாஸ்டிக் மூட்டைகளால் மூடப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கற்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதால் அவர் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கொடூர சம்பவத்தைக் கண்டித்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கிராம மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவனின் உடலை டிராக்டரில் வைத்து பாரி-பசேரி மாநில நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களுடன் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
