LATEST NEWS
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! ‘ரெயில் ஒன்’ செயலியில் 3% தள்ளுபடி சலுகை நீட்டிப்பு..!!
இந்திய ரயில்வே, பயணிகளின் வசதிக்காக முன்பு தனித்தனியாக இருந்த யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து ‘ரெயில் ஒன்’ என்ற ஒரே செயலியை அறிமுகப்படுத்தியது. இச்செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை எளிதாகப் பெற முடியும். மேலும், ரயில்கள் வரும் மற்றும் புறப்படும் நேரங்களைத் தெரிந்துகொள்ளவும், ரயில் பெட்டிகள் மற்றும் நிலையங்களில் உள்ள குறைகள் குறித்து புகார் அளிக்கவும் இச்செயலி பயன்படுகிறது. ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்ப்பதும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
‘ரெயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுக்கும் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத கட்டணச் சலுகையானது தற்போது 2027-ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் போன்ற எந்தவொரு டிஜிட்டல் கட்டண முறையைப் பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தாலும், அவர்களின் மொத்தக் கட்டணத்தில் 3 சதவீத தள்ளுபடி உடனடியாகக் கிடைக்கும்.
இதேபோல, ரயில்வேயின் ‘ஆர்-வாலட்’ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுப்பவர்களுக்கான 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை வழக்கில் இருக்கும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் பயணிகள் இந்தச் சலுகைகளையும் வசதிகளையும் பெற ‘ரெயில் ஒன்’ செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் அல்லது ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
