LATEST NEWS
“அடுத்து கைதுதான்… தப்ப முடியாது!”… செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த பேரதிர்ச்சி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தவெக ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது. இருப்பினும், காவல்துறை தங்களை வேறு ஏதேனும் பழைய அல்லது புதிய வழக்குகளில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். விசாரணைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கும் சூழலில், இந்த கைது அச்சம் காரணமாகப் பாதுகாப்பு கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.மேலும், சட்டப்படி முறையான நோட்டீஸ் அனுப்பாமல் வேறு வழக்குகளிலோ அல்லது விசாரணை என்ற பெயரிலோ தங்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், கைது செய்யக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, முன் ஜாமீன் பெற்ற பிறகும் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுவதாகவும், பிற வழக்குகளில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் சட்டப்பூர்வ நோட்டீஸ் வழங்கி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார். இருப்பினும், குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும், மனுதாரர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி இன்னும் காவல் நிலையத்தில் ஆஜராகி சரணடையவில்லை என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே முன்கூட்டியே இதுபோன்ற பொதுவான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவர்கள் இருவரும் இதுவரை ஆஜராகாததால், அவர்களைக் கைது செய்வது தொடர்பாக காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
