LATEST NEWS
“சாம்பார் செய்யறது ஒரு குத்தமாய்யா… நள்ளிரவில் 112 அவசர எண்ணைக் கூப்பிட்ட கணவன்..! பதறியடித்து ஓடிவந்த போலீஸ்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் படௌன் மாவட்டம், வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்குப் பொரித்த உணவுகள் மற்றும் குழம்பு வகைகளைச் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால், அவருடைய மனைவி தினமும் உணவுக்கு சாம்பாரையே சமைத்துப் பரிமாறி வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே உணவைப் பற்றி அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சமீபத்தில் ஒரு நாள் இரவு மீண்டும் மனைவி சாம்பார் சமைத்ததால், இருவருக்கும் இடையே நள்ளிரவு வரை கடுமையான வாக்குவாதம் நீடித்துள்ளது. கணவர் எவ்வளவு சொல்லியும் மனைவி அதைக் கேட்காததால், ஆத்திரமடைந்த கணவர் 112 என்ற அவசர சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். குடும்பத்தில் ஏதோ பெரிய அசம்பாவிதம் அல்லது ஆபத்து ஏற்பட்டுவிட்டதாகப் பதறியபடி கிராமத்திற்கு விரைந்து வந்த போலீசார், இந்த உணவுக் காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
தான் பொரித்த குழம்பு கேட்டாலும் மனைவி சாம்பாரையே செய்து தன்னைப் புறக்கணிப்பதாக கணவரும், தனது தரப்பு விளக்கத்தை மனைவியும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்ட போலீசார், சிறிய விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும். நடுராத்திரியில் இப்படி பண்றீங்களேம்மா என்று தலையில் அடித்தபடி அறிவுரை கூறினர். கணவன்-மனைவி இருவரும் ஒரு சமரசத்திற்கு வந்த பிறகு, போலீசார் புகாரை முடித்து வைத்தனர். குழம்பு சமைக்கப்பட்ட விதம் குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பது ஒரு அரிதான சம்பவம் என்பதால், இந்த விஷயம் தற்போது உள்ளூரில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
