CINEMA
திரையுலகில் மீண்டும் ஒரு பேரிழப்பு…அவர் எனக்கு வெறும் நடிகர் மட்டுமல்ல…மரியான், நெடுஞ்சாலை பட புகழ் நடிகர் சலீம் குமார் காலமானார்…கண்ணீரில் மூழ்கிய தமிழ் – மலையாள சினிமா உலகம்…!
மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார் (56), உடல்நலக் குறைவு காரணமாகக் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சனிக்கிழமை இரவு காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு நலமாக இருந்த அவர், திடீரென நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு 10.43 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இவரின் இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிமிக்ரி கலைஞராகத் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய சலீம் குமார், 1997-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானார். 2000-களின் தொடக்கத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த இவர், பின்னர் தனது அசாத்திய நடிப்பால் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக உருவெடுத்தார். தனது 30 ஆண்டுகால சினிமா பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ‘அச்சனுறங்காத வீடு’ படத்திற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். குறிப்பாக, ‘ஆதாமின்றெ மகன் அபூ’ திரைப்படத்தில் இவரின் உன்னதமான நடிப்பிற்காகத் தேசிய அளவிலும், கேரள மாநில அளவிலும் சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்று சாதனை படைத்தார். தமிழில் தனுஷ் நடித்த ‘மரியான்’ மற்றும் ஆரி நடிப்பில் வெளியான ‘நெடுஞ்சாலை’ ஆகிய திரைப்படங்களிலும் இவர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சலீம் குமாரின் திடீர் மறைவு மலையாள சினிமா உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது. இவரது மறைவுக்குக் கேரள அரசியல் தலைவர்கள், மலையாள மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சலீம் குமார் வெறும் சினிமா நடிகர் மட்டுமல்ல, தனக்கு ஒரு சகோதரர் போன்றவர் என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். மறைந்த சலீம் குமாருக்கு சுனிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இணையத்தில் அவரது நினைவுகளையும், திரைப்படக் காட்சிகளையும் பகிர்ந்து ரசிகர்கள் அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
