LATEST NEWS
கொங்கு கூடாரத்தை மீட்க பலே ஸ்கெட்ச்…! 5 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க எடுக்கப் போகும் அதிரடி ஆக்ஷன்…. சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!
தமிழகத்தில் காலியாக உள்ள பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் மற்றும் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த பொதுத்தேர்தலில் 47 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்த அ.தி.மு.க-விலிருந்து சில சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி, ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததால் இத்தொகுதிகள் காலியாகின.
தங்களை விட்டுச் சென்றவர்களுக்குத் தேர்தல் களம் மூலம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், உத்தேச வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து நேரடியாகத் தேர்தல் பணிகளைக் கவனித்து வருகிறார். முதற்கட்டமாகக் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெருந்துறை மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு உள்ளூர் செல்வாக்கு மற்றும் பொருளாதார பலம் கொண்ட தலா மூன்று முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கூட்டணி கணக்குகளைச் சீரமைக்கும் விதமாக மதுராந்தகம் தொகுதியைப் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், அம்பாசமுத்திரம் தொகுதியைப் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஒதுக்குவது குறித்து அ.தி.மு.க தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாகவே வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பது உள்ளிட்ட களப்பணிகளைத் தொடங்க அ.தி.மு.க திட்டமிட்டுள்ளதால், இந்த இடைத்தேர்தல் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான ஒரு பெரும் அரசியல் பலப்பரீட்சையாகப் பார்க்கப்படுகிறது.
