LATEST NEWS
“என்னை முதலில் கொல்லுங்க” அதற்குப்பின் அதை செய்யுங்க… துரோகிகளுக்கு மம்தா பானர்ஜி விடுத்த பகீர் சவால்..!!
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள கடுமையான உள்நாட்டுப் பூசல் மற்றும் பிளவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரமா பட்டாச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கிளர்ச்சியாளர்கள் அணியில் இணைந்துள்ளார். மேலும், கட்சியின் 80 சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலும், மக்களவை எம்பிக்கள் மற்றொரு அணியாகவும் பிரிந்து சென்றுள்ளதால் ‘உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் யார்?’ என்ற அரசியல் குழப்பம் எழுந்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன் எதிரிகளுக்குக் கடுமையான சவால் விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு என்னை முதலில் கொலை தான் செய்ய வேண்டும்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் தேர்தல் சின்னம் தன்னிடம் மட்டுமே இருக்கும் என்றும், கட்சித் துரோகிகளுக்கு எதிராகச் சட்டப்படியான போராட்டங்களை நடத்தப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கட்சியின் முக்கியத் தலைவர்கள் விலகியதைத் தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில அளவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முழுப் பொறுப்பையும் மம்தா பானர்ஜியே தற்போது நேரடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். தனது இல்லத்தில் உள்ள கட்சி அலுவலகமே இனி பிரதான அலுவலகமாகச் செயல்படும் என்று அறிவித்துள்ள அவர், தாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) அழுத்தங்களுக்குப் பணியப் போவதில்லை என்றும் விவரித்துள்ளார்.
