LATEST NEWS
அதிமுகவில் விழுந்த அடுத்த இடி..! இபிஎஸ் கூட்டத்தைப் புறக்கணித்த எம்.எல்.ஏ… தவெக நோக்கி நகரும் 7 விக்கெட்டுகள்..? திடீர் பரபரப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் சறுக்கல்களுக்குப் பிறகு கட்சியை வலுப்படுத்த மாவட்ட வாரியாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆற்காடு பகுதி நிர்வாகிகள் கூட்டத்தை, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் புறக்கணித்துள்ளார். கட்சியின் உட்கட்சி நெருக்கடி மற்றும் நிர்வாகிகளின் அதிருப்திக்கு மத்தியில் நடந்துள்ள இந்த புறக்கணிப்பு, இபிஎஸ் தலைமைக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளதுடன் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கட்சியில் ஏற்கனவே எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையிலான அதிருப்தி குழுவினர் தற்காலிகமாக அமைதி காத்தாலும், அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படாததால் அதிருப்தி நீடிக்கிறது. தற்போதைய 42 அதிமுக எம்எல்ஏ-க்களில் கணிசமானோர் இபிஎஸ் செயல்பாடுகளில் அதிருப்தியில் உள்ளதாகவும், அதில் சுமார் 7 எம்எல்ஏ-க்கள் தவெக பக்கம் தாவக்கூடும் என்றும் வெளியாகும் அரசியல் தகவல்கள் கட்சியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக சந்தித்து வரும் தொடர் சறுக்கல்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத போக்கே காரணம் என விமர்சகர்கள் கருதுகின்றனர். நிர்வாகிகளின் ஒத்துழைப்பின்மை மற்றும் எம்எல்ஏ-க்களின் அதிருப்தியால் இபிஎஸ் கடும் ஆதங்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்களை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், கட்சியை மீட்டெடுக்கவும் அவர் எடுக்கப் போகும் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளைப் பொறுத்தே அதிமுகவின் எதிர்காலம் அமையும்.
