CRIME
கடை முதலாளியை கதறவிட்ட 50 வயது பெண்மணி.. 4 மாத நாடகத்தின் க்ளைமாக்ஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!
வேதாரண்யம் மற்றும் சென்னை வியாசர்பாடியில் வாடிக்கையாளர்கள் என்ற போர்வையில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற கும்பலால் வணிகர்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். வேதாரண்யம் கடைத்தெருவில் உள்ள பிரபல நகைக் கடைக்கு வந்த பெண்கள் சிலர், ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பியுள்ளனர். அந்தச் சமயம் அவர்களுடன் வந்த இளம் பெண் ஒருவர் கவுன்ட்டரில் இருந்த வெள்ளி கொலுசுகளை லாவகமாகக் கைப்பையில் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகின. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அலாசி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட பெண்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மறுபுறம், சென்னை வியாசர்பாடியில் உள்ள நகைக் கடையில் கணக்குகளைச் சரிபார்த்தபோது சுமார் 85 சவரன் நகைகள் காணாமல் போனது கண்டுப்பிடிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக முகத்தை மறைத்து ஹிஜாப் அணிந்து வந்த பெண் ஒருவர், நகைகளை வாங்குவது போல் நடித்து ஊழியர்களை ஏமாற்றி இந்தத் திருட்டில் ஈடுபட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் காரில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளின் துணையோடு, வாகன எண்ணை வைத்து மீஞ்சூரைச் சேர்ந்த ரிகானா (50) என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, அவரிடமிருந்து 20 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற கூட்டாளிகளையும் போலீசார் வலைவீசித் தேடி வரும் வேளையில், இதுபோன்ற நூதன திருட்டுகளால் வியாபாரிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
