LATEST NEWS
“அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! தனி அணியாக களம் இறங்கும் இடதுசாரிகள்..! துறை மாற்றம் குறித்து சி.பி.எம். சண்முகம் கருத்து..!!”
மூன்று இடதுசாரி கட்சிகள் இணைந்து மாநில ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளதாகவும், இனி இடதுசாரிகள் ஒரு தனி அணியாகச் செயல்பட தீர்மானித்துள்ளதாகவும் சி.பி.எம். மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு இடைத்தேர்தல் அல்லது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தேர்தல் வரும்போது அப்போதைய சூழ்நிலையைக் குறித்து யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் கூறுவது மாற்று அணி அல்ல, மாறாக ‘மாற்று கொள்கை’ என்று விளக்கமளித்த அவர், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வறுமை மற்றும் குடியிருப்பு போன்ற உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகளுக்கு முதலாளித்துவ கொள்கைகளால் தீர்வு காண முடியாது என்று சாடினார். இவற்றுக்கெல்லாம் இடதுசாரி கொள்கைகளால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என்றும், தற்போதைய ஆட்சி எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்று தாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை, அதற்காக ஆதரவு தரவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பதிலளிக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும், ஆனால் அமைச்சர்கள் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருவதால் அரசு சார்பில் பதில் இல்லை எனக் கூற முடியாது என்றும் சண்முகம் கூறினார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் மாற்றம் குறித்துப் பேசிய அவர், துறையின் பெயரை விட அந்தத் துறை சார்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு என்ன செய்யப்போகிறது மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறது என்பதுதான் தற்போதைய முக்கிய விவாதம் என்று தெரிவித்தார்.
