CRIME
“ஆசை வார்த்தை காட்டி கர்ப்பமாக்கிய தாய்மாமன்..! குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்..! வெளிவந்த கொடூரம்… தேனி நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!”
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம், அவரது தாய்மாமனான முகேஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்து, அக்டோபர் 13, 2023 அன்று பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சிறுமியின் தாயாரின் அறிவுறுத்தலின் பேரில் அந்தச் குழந்தை முதலில் வேறொருவரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பராமரிக்க முடியாத சூழலால் குழந்தை நலப் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், நவம்பர் 27, 2023 அன்று காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முகேஷைக் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், முகேஷுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி ச. எழில் தீர்ப்பளித்தார். அதேவேளையில், வழக்கில் 2-வது எதிரியாகச் சேர்க்கப்பட்ட சிறுமியின் தாயார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளியிடம் வசூலிக்கப்படும் ரூ.10,000 அபராதத் தொகையைக் கழித்து, மீதமுள்ள ரூ.4.90 லட்சத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சிறுமியின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும், சிறுமி வயது வந்த பிறகு அத்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்ப்பைத் தொடர்ந்து குற்றவாளி முகேஷ் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
