LATEST NEWS
தலைகீழாக மாறும் அம்மா உணவகங்கள்..! ரூ.1.10 கோடி நிதியில் முதலமைச்சர் விஜய் அதிரடி..!!
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ‘அம்மா உணவகங்கள்’ கடந்த சில ஆண்டுகளாகப் போதிய பராமரிப்பின்றி இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அவற்றை நவீனமயமாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சேலம் மாநகராட்சியில் இயங்கி வரும் 11 அம்மா உணவகங்களை முழுமையாகப் புதுப்பித்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 1 கோடியே 10 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மா உணவகங்களில் தற்போது போர்க்கால அடிப்படையில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக மணியனூர் பகுதியில் இயங்கும் அம்மா உணவகத்தைப் புதுப்பிக்க மட்டும் ரூ. 20.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் உணவருந்தும் அறைகள் கட்டுதல், புதிய சமையல் பாத்திரங்கள் வாங்குதல் மற்றும் சூரமங்களம் உழவர் சந்தை உணவகத்தின் வசதிகளை உயர்த்துதல் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மேலும், அஸ்தம்பட்டி, அரசு தலைமை மருத்துவமனை, அம்மாப்பேட்டை, கருங்கல்பட்டி ஆகிய இடங்களில் பழுதுடைந்த மின்விசிறிகள், விளக்குகள் மாற்றப்பட்டு, புதிய RO குடிநீர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, வண்ணங்கள் பூசப்பட்டு கார்ப்பரேட் ஹோட்டல்களுக்கு இணையான தூய்மையான சூழலாக மாற்றப்பட்டு வருகிறது.
அரசியல் வேறுபாடுகளைப் பாராமல் முந்தைய அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டத்தைச் சீரமைத்து மேம்படுத்தும் இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இச்சீரமைப்பு நடவடிக்கைகளால் தமிழக அம்மா உணவகங்களில் தினமும் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பழைய விலையிலேயே தரமான உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் முதலமைச்சருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.
