LATEST NEWS
திடீர் ரோடு பிளாக்!.. சென்னை மாநகராட்சியில் ரூ. 1600 கோடி ஊழல் புகார்? கதிகலங்கும் மேயர் பிரியா.. விசாரணையில் வெளியான ஷாக்கிங் மேட்டர்..!!
சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே, அதன் நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் சுமை ஆகியவை பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளன. வரவை விடச் செலவு பல மடங்கு அதிகரித்து, சுமார் ரூ.1,602 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், உலக வங்கி மற்றும் ஜப்பான் வளர்ச்சி வங்கியிடம் பெறப்பட்ட கடன்களுக்காக ஆண்டுதோறும் பல கோடிகள் வட்டியாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், மேயர் பிரியா தாக்கல் செய்த பட்ஜெட்டில் சுமார் 90 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவற்றுக்கு பெருமளவிலான நிதியும் ஒதுக்கப்பட்டது.
ஆனால், இந்தத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீடுகள் தேவைக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதாக எழுந்த புகார்கள் தற்போது புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, மாநகராட்சிப் பள்ளிகளுக்கு 100 பிரிண்டர்கள் வாங்க ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மறுஆய்வு செய்து வெறும் ரூ.22.12 லட்சத்திலேயே வாங்க முடிந்ததால் ரூ.37.78 லட்சம் மிச்சப்படுத்தப்பட்டது. ஒரு சிறிய கொள்முதல் விவகாரத்திலேயே இத்தனை லட்சம் ரூபாய் கூடுதல் கணக்கு காட்டப்பட்டிருப்பது, பள்ளி மாணவர்களுக்கான வழித்தடங்கள், நீர்நிலைகள் சீரமைப்பு மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர் அமைத்தல் எனப் பல நூறு கோடி மதிப்பிலான பிற பெரிய திட்டங்களின் மீதும் கடும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதன் காரணமாகவே, சென்னை மாநகராட்சியின் ஒட்டுமொத்த திட்டங்களையும் தீவிர விசாரணைக்கும் மறுமதிப்பீட்டுக்கும் உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், “திட்டங்கள் எதுவும் கைவிடப்படாது. மேயர் அறிவித்த பணிகள் அனைத்தும் நிச்சயம் செயல்படுத்தப்படும்,” என்று உறுதி அளித்துள்ளனர். அதேநேரத்தில், கட்டமைப்புப் பணிகளுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்ட தொகைகள் குறைக்கப்பட்டு, நிதி மதிப்பீடு மட்டுமே மறுஆய்வு செய்யப்படுவதாகவும், இதன் மூலம் வீணான செலவினங்கள் குறைக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
