LATEST NEWS
“கனவு இல்லம்… கைக்கூடி வந்த திருமணம்… ஒரே தாக்குதலில் முடிந்த மாலுமியின் வாழ்க்கை…! உக்ரைன் கடலில் பறிபோன கேரள இளைஞரின் உயிர்..!!”
உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திற்கு அருகே, ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயன் பலியானார். ‘எம்.வி. கோல்டன் லியோ’ என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் உயிரிழந்த நான்கு இந்தியர்களில் அகிலும் ஒருவர். கினியா-பிசாவு நாட்டின் கொடியுடன் இயங்கி வந்த இக்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அகில் உட்பட மொத்தம் 10 பணியாளர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்த அகில், தனது 19-வது வயதில் மெர்ச்சன்ட் நேவியில் சேர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக இக்கப்பலில் பணியாற்றி வந்தார். மின்சாரக் கடையில் பணிபுரியும் தந்தை ஜோயன் மற்றும் காப்பீட்டு முகவரான தாய் சாலி ஆகியோரின் ஒரே மகனான அகில், சமீபத்தில்தான் தனது குடும்பத்திற்காக ஒரு புதிய வீட்டைக் கட்டியிருந்தார். மேலும், மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து நிச்சயதார்த்தம் முடித்திருந்த இவருக்கு, இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது.
திங்கள்கிழமை மாலையில் ஷிப்பிங் நிறுவனத்திடமிருந்து வந்த மின்னஞ்சல் மூலமாகவே அகிலின் குடும்பத்தினருக்கு இந்தச் செய்தி தெரியவந்தது. இதையடுத்து, அகிலின் உடலை தாய்நாட்டிற்கு விரைவாகக் கொண்டு வரவும் தேவையான தகவல்களைச் சேகரிக்கவும், ரஷ்ய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுமாறு ‘நோர்ஃபா’ துறைக்கு கேரள முதலமைச்சர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
