LATEST NEWS
“இனி இவ என் பொண்ணு…” காப்பகத்தில் பசியால் கதறிய குழந்தை… சட்டென அமைச்சர் செய்த ‘அந்த’ செயல்..! இணையத்தில் வைரலாகும் சீதா பாடியின் நெகிழ்ச்சி வீடியோ..!!
நேபாள நாட்டின் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை அமைச்சரான சீதா பாடி, மீட்பு முகாமில் இருந்த 17 நாள்களே ஆன குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. காத்மாண்டுவின் நக்சால் பகுதியில் உள்ள ‘பால் மந்தீர்’ காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் பராமரிக்கப்பட்டு வந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டனர். மழைக்காலத்தில் கழிவுநீர் புகுந்த அறையில், அழுக்கான மெத்தையில் பல குழந்தைகள் அசுத்தமான ஆடைகளுடன் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, அமைச்சர் உடனடியாக அவர்களை மீட்க உத்தரவிட்டார்.
மருத்துவக் குழுவினருடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலையைப் பரிசோதிக்கச் சென்றபோது, அங்கிருந்த 17 நாள்களே ஆன பெண் குழந்தை ஒன்று பசியால் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தது. காப்பகத்தில் பால் அல்லது மாற்று உணவுகள் எதுவுமே இல்லாத நிலையில், நிலைமையைப் புரிந்துகொண்ட அமைச்சர் சீதா பாடி, அழுதுகொண்டிருந்த குழந்தையைத் தன் மடியில் எடுத்து அரவணைத்துத் தாய்ப்பாலூட்டினார். குழந்தை அமைதியாகி தூங்கும் வரை அவர் பாலூட்டினார், மேலும் அன்றைய தினம் இருமுறை அக்குழந்தைக்குப் பாலூட்டியதாகக் கூறப்படுகிறது. “அவளை நான் கைகளில் ஏந்தியபோது என் சொந்தக் குழந்தையைப் போலவே உணர்ந்தேன்; இனி நானே அவளுக்குத் தாய்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வெளியாகி, பலரின் பாராட்டுகளையும் தாயன்பின் மகத்துவத்தையும் பெற்று வருகிறது. 1995-இல் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கழிவுநீர் அகற்றும் மற்றும் கூலித் தொழில் செய்யும் சமூகத்திலிருந்து வந்து, தாமும் ஒரு காப்பகத்தில் வளர்ந்து அமைச்சராக உயர்ந்த சீதா பாடியின் இந்தச் செயல் பலராலும் போற்றப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் பராமரிப்பை மேம்படுத்தவும், புதிய கட்டடங்கள் மற்றும் புதிய விதிகளை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
