LATEST NEWS
தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு…. சாலமன் பாப்பையா மறைவுக்கு CM விஜய் இரங்கல்..!!
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய் தந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் சாலமன் பாப்பையா காலமான செய்தி அறிந்து, தாம் மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் விஜய் தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமது இரங்கல் செய்தியில் சாலமன் பாப்பையாவின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றியுள்ள முதலமைச்சர் விஜய், “தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்றம் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். மேலும், பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக மட்டுமே கடந்து போகாமல், அவற்றைச் சமூகத்தின் சிந்தனையைத் தூண்டக்கூடிய அறிவுத் தளங்களாக மாற்றியதில் அவரது பங்கு மிக மகத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாலமன் பாப்பையா அவர்களின் இந்த மறைவு ஒட்டுமொத்த தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத ஒரு பேரிழப்பாகும் என்று முதலமைச்சர் விஜய் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தமிழறிஞர் சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் விஜய் தனது இரங்கல் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
