CRIME
“என் புள்ள சாவுக்கு நீதான் காரணம்” மருமகள் மீது வந்த சந்தேகம்.. கோடாரியால் அடித்தே துடிக்க துடிக்க கொன்ற மாமனார்..!!!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், தனது மகனின் மரணத்திற்கும் தனது உடல்நலக் குறைவிற்கும் மருமகள்தான் காரணம் எனச் சந்தேகித்து, 72 வயது மாமனார் கோடாரியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாக்பூரின் யசோதரா நகர் பகுதியில் வசித்து வந்த லட்சுமி ரவிசங்கர் பாலி (42) என்ற பெண்ணின் கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் அவர் தனது இரண்டு குழந்தைகளுடன், மாமனார் நத்துலால் பாலியுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த மாமனார் நத்துலால், மருமகள் லட்சுமி தனக்கும் தன் மகனுக்கும் சூனியம் வைத்ததாகத் தவறாகச் சந்தேகித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமையன்று லட்சுமி வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
ஆத்திரமடைந்த நத்துலால், அருகில் இருந்த கோடரியால் லட்சுமியின் தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மருமகளைக் கொலை செய்த பிறகு, குற்ற உணர்ச்சியால் நத்துலால் வீட்டின் பின்புறமிருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்து வந்த யசோதரா நகர் போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
